நள்ளிரவு 12 மணி வரை துருவித் துருவி விசாரித்த சிபிசிஐடி.. இன்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை!
கரூர்: ரூபாய் 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு 12 மணி வரை விசாரணை நடத்திய நிலையில் இன்றும் தீவிர விசாரணை நடக்கிறது. இன்று மதியம் 2.30 மணியுடன் நீதிமன்றம் வழங்கிய 2 நாள் காவல் முடிகிறது.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

சிபிசிஐடி போலீசாரால் தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார் விஜயபாஸ்கர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சசூரில் பதுங்கி இருப்பதாகவும், அவர் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வருவதாகவும் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார் விஜயபாஸ்கர்.
பின்னர் அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17 ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது, சொத்து ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கரை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களைக் கேட்ட நீதிபதி பரத்குமார் விஜயபாஸ்கரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காந்திகிராமம் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிபிசிஐடி மேற்கு மண்டல எஸ்.பி. ஸ்ரீதேவி விஜயபாஸ்கரிடம் நில மோசடி பதிவு தொடர்பாக, சிபிசிஐடி தனி படை போலீசார் திரட்டிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நேற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நேற்று இரவு 12 மணி வரை விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் விஜயபாஸ்கரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மதியம் 2.30 மணியுடன் நீதிமன்றம் வழங்கிய 2 நாள் காவல் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகலில் மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எம். ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளார்.
மேலும், சிபிசிஐடி போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன், முன்னாள் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோரிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications