முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இப்படி பேசலாமா? தருமபுர ஆதினம் விவகாரம்! அண்ணாமலைக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி
கரூர்: தருமபுரம் ஆதின பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்
தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெறும். தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் கோவிலுக்கு தூக்கி செல்வதுதான் இந்த பிரவேசத்தின் முறையாகும்.

தடை
இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து. தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருள் ஆனது. இதற்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் நேற்று முதல்வரையும் சந்தித்து இருந்தனர்.

ஏற்புடையது அல்ல
இதையடுத்து இன்றைய தினம் தருமபுரம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். தமிழக அரசின் இந்த முடிவை சில அரசியல் கட்சிகள் எதிர்த்துள்ளனர். இதனிடையே கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தருமபுர ஆதினம் பல்லக்கு தூக்கும் விவகாரத்தில், பல்லக்கு தூக்குபவர்கள் விரும்பிதான் தூக்குகிறார்கள் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.

இப்படி பேசலாமா
பல்வேறு ஆதீனங்கள் இந்த முறையைக் கைவிட்டுள்ளனர். எனவே, தருமபுர ஆதீனத்தை கேட்பாக்கக் கொள்வது என்னவென்றால், அவரும் இந்த முறையைக் கைவிட வேண்டும். அண்ணாமலை நானே சென்று பல்லக்கு தூக்குவேன் என்று சொல்கிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இருந்தவர் இப்படிப் பேசலாமா? இது ஏற்புடையதல்ல. பாஜக இதைக் கூட விட்டு வைக்காமல், இதிலும் அரசியல் செய்கிறது.

பழைய பென்சன் திட்டம்
நிதிச்சுமையைக் காரணம் காட்டி பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்று நிதியமைச்சர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கூறிய நிலையில், நிதியமைச்சர் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று கூறுவது முறை அல்ல. இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏழை மக்கள்
நீதிமன்றங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் நீர்நிலை புறம்போக்கில் இருக்கிறது. இதற்கு நீதிமன்றம் என்ன சொல்லுகிறது. ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றாமல் தமிழக அரசு வாதாடி மாற்று வழி கொண்டு வர வேண்டும். நீதிமன்றம் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். சமையல் எரிவாயு விலையை மனசாட்சி இல்லாமல் ஏற்றுகிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகின்றனர். செஸ் வரி மூலம் 28 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் 11 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதற்காக இவ்வாறு வரி விதிக்கப்படுகிறதா?

அணி மாறும் திமுக
திமுக அணி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை திமுக எதிர்த்து வரும் நிலையில், திமுக அணி மாறப் போவதாகத் தேவையில்லாமல் சிலர் பேசிவருகிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியின் மாநிலத் தலைமை கட்சியாக திமுக உள்ளது. அதேநேரம் மத்தியிலும் திமுக ஒரு வலுவான கட்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications