"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்
அரவக்குறிச்சி: திமுக தலைவர் ஸ்டாலின், யதார்த்தமாக சொன்னாரா, அல்லது ஏதேனும் திட்டத்தில் சொன்னாரா என்று தெரியவில்லை.. "உள்ளாட்சி தேர்தல் வரைக்கும்கூட இந்த ஆட்சி இருக்குமா இருக்காதான்னு தெரியலை" என்றார்.
வெற்றி பெற வைத்த வாக்காளர்களை நேரில் சந்தித்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நன்றி சொல்லி வருகிறார் ஸ்டாலின். அதன்படி அரவக்குறிச்சியிலும் நன்றி சொல்ல போனார். அப்போது பொதுமக்களிடம் உரையாடும்போது, "உங்களுக்கு குடிக்க தினமும் தண்ணீர் வழங்கப்படுகிறதா?" என்று கேட்டார்.
அதற்கு பொதுமக்களும், "10 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணி வருகிறது. எங்களுக்காவது பரவாயில்லை.. கிராமங்களில் 15 நாள் ஆகுது. ஒரு அடிப்படை வசதியும் இல்லை. ஜீவா நகருக்குள் வந்து பாருங்கள்.. புரியும்.. " என்றனர்.
அதற்கு ஸ்டாலின், "இப்போ திமுகவில் 101 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதுக்குதான் இவர்கள் எல்லாரையும் போய் மக்களை சந்திச்சிட்டு வாங்கன்னு சொல்லி இருக்கேன். மக்கள் நம்மை தேடி வரக்கூடாது. நாம்தான் மக்களை தேடிப்போய் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை கேட்டு, அதிகாரிகள், கலெக்டர்களை பார்த்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.
3 வருஷமா உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போ நடத்தப்போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் எப்போது நடத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவரை இந்த ஆட்சி இருக்குமா என்பதும் தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும், குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு, சாலை, சாக்கடை வசதிகள் போன்ற பிரச்னைகளை தீர்க்க முடியும்" என்றார்.