கரூரில் ரெய்டு.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு ‘குறி’? கணக்கு வழக்கு நோட்டை தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
கரூர்: கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டnனர். கரூரில் திட்ட மதிப்பீடு அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா என்பவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. மூக்கையாவுடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
கரூர் நகர் பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மூக்கையாவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையானது அவருக்கு நெருக்கமான இடங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்றது.
ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ், மூக்கையாவின் மகன் வெங்கடேசனின் தொழில் பங்குதாரர் ஆவார். காலை 8 மணிக்கு சோதனை தொடங்கிய சோதனை மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. சுமார் 9 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியல் எஸ்டேட்டில் மூக்கையாவின் மகன் வெங்கடேசன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர் ரமேஷ் ஆகிய இருவரும் மேற்கொண்ட கணக்கு வழக்குகள் அடங்கிய நோட்டுகளும், பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சோதனை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது. இவை ஒருபுறமிருக்க மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கரூர் பகுதியில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications