செந்தில் பாலாஜிக்கு சோதனை மேல் சோதனை.. விடாது விரட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள்.. கலகலக்கும் கரூர்
கரூர்: அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21 மணி நேரமாக கரூர், பரமத்தி வேலூரில் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவப்படையினர் பாதுகாப்புடன் விடிய விடிய நீடித்த சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.
தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு கரூர் மண்மங்கலம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ளது. இவரின் தம்பி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரது வீடு மற்றும் அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணை ராணுவ படை போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அமைச்சரின் நண்பர்கள் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. பின்னர் 2வது முறையாக நடந்த சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தால் அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் ஆயர்தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மழை விட்டும் தூறல் விடாத கதையாக செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனை தொடர்ந்து கொண்டு உள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி 3வது முறையாக செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 4வது முறையாக தற்போது அமலாக்கத்துறை கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அமலாக்கத்துறையினர் நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோவை சாலையில் உள்ள சங்கர் வீடு மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் தனலட்சுமி உரிமையாளர் வீடு ஆகிய 4 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். சங்கர் வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. சங்கர் வீட்டில் சோதனை நிறைவடைந்தாலும் தனலட்சுமி மார்பிள் உரிமையாளர் வீட்டில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications