செந்தில்பாலாஜியால் கரையும் கரூர் திமுக... அதிமுகவில் இணையும் Ex Mp சின்னச்சாமி.. பின்னணி என்ன..?
கரூர்: அதிமுக-அமமுக என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜியால், கரூர் மாவட்ட உடன் பிறப்புகள் பலர் அதிமுகவுக்கு தாவி வருகின்றனர்.
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது முதலே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், அமமுகவிலிருந்து வந்தவர்களை மட்டுமே எப்போதும் தன்னுடன் வைத்துக் கொள்கிறார் என்பதும் மாவட்டச் செயலாளராகிய அவரது நிகழ்ச்சி நிரல்கள் கட்சிக்காரர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்பதும் தான்.

இதனிடையே கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. காமராஜ் அண்மையில் அதிமுகவில் இணைந்துவிட்டார். இவரை அடுத்து திமுக மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கரூர் ம.சின்னச்சாமி நாளை அதிமுகவில் இணைய உள்ளார்.
நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக கரூர் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அவர் அதிமுகவில் இணைக்கவுள்ளார். இது தொடர்பாக அவர் நாளிதழில் அளித்துள்ள விளம்பரத்தில், ''பத்தாண்டு காலம் திமுகவில் உண்மைத் தொண்டனாக பணியாற்றினேன், உரிய மரியாதை இல்லாததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெளியேறுகிறேன்'' என தனது வேதனைக் குரலை வெளிப்படுத்தியுள்ளார் சின்னச்சாமி.
இந்த நிகழ்வை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் திமுகவுக்கு சற்று பின்னடைவை தரும் என கருதப்படுகிறது. இதேபோல் குளித்தலை தொகுதி திமுக சிட்டிங் எம்.எல்.ஏ.ராமரும் செந்தில்பாலாஜி மீது கடும் கோபத்திலும், வருத்தத்திலும் இருந்து வருகிறார். கரூர் சின்னச்சாமியை பொறுத்தவரை கரூர், மணப்பாறை என இரண்டு தொகுதிகளுக்கும் பணம் கட்டியிருந்தார்.

ஒரு வேளை இவருக்கு சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்றார் என்றால் கேபினட்டில் இடம் கிடைத்தாலும் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை. இந்நிலையில் தனக்கு போட்டியாக ஒருவர் வந்துவிடக் கூடாது எனக் கருதியே செந்தில்பாலாஜி தனது அரசியல் சடுகுடு ஆட்டத்தை ஆடியிருப்பதாக கரூர் உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
மேலும் கூறிய அவர்கள், இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ''எந்த வேட்பாளராவது போனை எடுக்காவிட்டால் என்னை தொடர்பு கொண்டு சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்படி அவர் விசாரிக்கத் தொடங்கினால் செந்தில்பாலாஜியை தான் முதலில் அழைத்து அவர் விசாரிக்க வேண்டும் என்றனர்.
சின்னச்சாமியையும், காமராஜையும் ''செந்தில்பாலாஜி நம்ப வைத்து கழுத்தறுத்த காரணமாகவே அவர்கள் திமுகவை விட்டு வெளியேறுகிறார்கள்'' என கரூர் உ.பி.க்கள் கூறியது தொடர்பாக செந்தில்பாலாஜியிடம் விளக்கம் அறிய அவரது அலைபேசிக்கு ஒரு முறை இருமுறை அல்ல பல முறை தொடர்பு கொண்டோம். ஆனால் ஸ்விட்ச் ஆஃப் என்ற பதிலையே அவரது மூன்று எண்களும் கூறின.












Click it and Unblock the Notifications