கரூர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடுகளில் 2 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை.. சிக்கியது என்ன?
கரூர்: செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இரண்டு நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நிறைவடைந்துள்ளது . மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் துணையோடு நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இது போதாத காலம்தான் போல. ஒரு பக்கம் வருமான வரித்துறை, மற்றொரு பக்கம் அமலாக்கத்துறை என சோதனை மேல் சோதனையாக உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விடிய விடிய நடத்திய விசாரணையில் நெஞ்சுவலி வந்து பைபாஸ் ஆபரேசன் செய்து தற்போது ஐசியூவில் சிகிச்சையில் இருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த மே 26 ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் , அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் அவரது , சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு பலரது அலுலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அப்போது, கரூர்-ஈரோடு சாலை கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வீடுகளில் தலா ஒரு அறை, காமராஜபுரத்தில் உள்ள பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், காந்திபுரத்தில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர்ஆனந்த் வீடு, வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் சந்திரசேகரின் அலுவலகம், ஜவஹர் பஜாரில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் உள்ள ஒரு அறை ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கரூருக்கு நேற்று காலை வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வசிக்கும் வீடுகளில் உள்ள அறைகள் உள்ளிட்ட 6 இடங்களில் ஏற்கெனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் ஜவஹர் பஜார் பழனி முருகன் ஜூவல்லரியில் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ஒரு குழுவினர் மாயனூர் சென்றுள்ளனர். ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாட்கள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி சோதனையின் போது 20க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது திமுகவினர் கற்களை வீசி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த முறை துணை ராணுவப்படை வீரர்கள் உதவியினர் வருமான வரி சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications