அடுத்தடுத்த ரெய்டு.. சபரீசனை அடுத்து செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை.. திமுக வேட்பாளர்களுக்கு குறி?
கரூர்: கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
திமுக தலைவர்கள் வீடுகளில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடைசி கட்டத்தில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
திமுகவினர் மத்தியில் இந்த ரெய்டு கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம்தான் திமுக எம்.எல்.ஏ., எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
ரெய்டு
எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போதுதான் இந்த ரெய்டு நடந்தது. அப்போதே திமுகவினர் மத்தியில் இந்த ரெய்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது
இந்த நிலையில் தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. 2 காரில் வந்த அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டிலும் அவரின் அலுவலகத்திலும் சோதனை செய்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி தற்போது பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ரெய்டு நடந்து வருகிறது.
வேறு எங்கு
அதோடு அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அவரின் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் சென்னையில் உள்ள ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
எதிர்ப்பு
சபரீசனுக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவினர் வீடுகளில் இப்படி நடக்கும் ரெய்டுக்கு திமுக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.