முடியெல்லாம் நரச்சு போச்சு! மருதாணி போடுங்க அக்கான்ணு சொன்னாங்க! முதலமைச்சரை சிரிக்க வைத்த ஜோதிமணி!
கரூர்: தனது தலைமுடிக்கு மருதாணி போடக்கூட நேரமில்லாமல் மக்கள் பணியில் சுற்றி சுழன்று வருவதாக பேசியிருக்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
''முதலமைச்சர் மீட்டிங்கில் கலந்துகொள்ளப் போறீங்க, முடியெல்லாம் நரைத்து போச்சு மருதாணி போடுங்க அக்கா'' என்று ஒரு சகோதரி தன்னிடம் நேற்று கூறியதாக ஜோதிமணி பேசியதை கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் சிரித்தார்.
இதனிடையே அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சிவசங்கரை அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் என்று குறிப்பிட்டு பேசிய ஜோதிமணி, செந்தில் பாலாஜியை மட்டும் திரு என்பதுடன் நிறுத்திக் கொண்டார்.

கரூர் விழா
கரூரில் நடைபெற்ற சுமார் 80,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜோதிமணியும் கலந்துகொண்டார். அவரை பேச அழைத்த போது மேடையில் இருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை வரவேற்று பேசுகையில் செந்தில் பாலாஜியை தவிர மற்ற அனைவரையும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் என்று குறிப்பிட்டார். ஆனால் செந்தில் பாலாஜி பெயரை கூறும் போது மட்டும் திரு. என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

நேரு பார்க்கிறார்
இதிலிருந்தே அமைச்சர் செந்தில் பாலாஜியோடு ஜோதிமணிக்கு இருக்கும் பகையை உணர முடிகிறது. தொடர்ந்து முதலமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டி பட்டியலிட்டு பேசிய அவர், ''அண்ணன் நேரு பார்த்துக் கொண்டே இருக்கிறார், என் பேச்சை சீக்கிரம் முடித்துவிடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு சிறிய நிகழ்வை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்'' என்றார் ஜோதிமணி எம்.பி.

முடிக்கு மருதாணி
மேலும் தொடர்ந்து பேசிய அவர், '' நேற்று மணப்பாறை வரை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே என்னை பார்த்த சகோதரி ஒருவர், நாளைக்கு முதலமைச்சர் மீட்டிங்கிற்கு போறீங்க, முடியெல்லாம் நரச்சு போச்சு, மருதாணி பூச்சிக்கொள்ள வேண்டியது தானே என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் சொன்னேன், ஒரு மருதாணி பூசி அடுத்த மருதாணி பூசுவதற்குள் முதல்வர் நம்ம தொகுதிக்கு வந்திடுவாரு, அதனால் எனக்கு நேரமே இல்லை'' என்று கூறினேன் என்றார்.

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி. இவ்வாறு பேசியதை மேடையில் இருந்து கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் சிரித்தார். மேலும், தனது பேச்சை முடித்து இருக்கையில் அமர்ந்த ஜோதிமணியை அழைத்து முதல்வர் ஸ்டாலின் ஏதோ கூறினார். இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஆச்சரியத்துடன் பார்த்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications