கரூரில் ஐடி துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கு..15 திமுகவினருக்கு ஜாமீன் கிடைக்குமா.. இன்று தீர்ப்பு
கரூர்: வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், கரூர் நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேர் சரணடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
கரூரில் மே 25 ஆம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனையிட சென்றனர்.
அப்போது ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக்குமாரின் வீட்டை சோதனையிட சென்ற போது கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் வருமான வரித் துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் இருந்த சில கோப்புகளை பறித்தனர். மேலும் பெண் அதிகாரியிடம் ஒரு சில திமுகவினர் மோசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

அது போல் கரூர் மாவட்டம் ராயலூரிலும் அதே நாளில் கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீடு மற்றும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை செய்ய சென்ற போதும் வருமான வரித் துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனை நடத்த வருமான வரித் துறை திட்டமிட்டிருந்த நிலையில் 7 இடங்களில் திமுகவினர் இடையூறு ஏற்படுத்தியதால் சோதனை செய்ய முடியவில்லை என வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையால் மேயர் கவிதா தலைமையில் நடக்கவிருந்த மாமன்றக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் தஞ்சமடைந்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 50 திமுகவினர் மீது வழக்குப் பதிந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்கை முதலில் விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரித் துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 28ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 3 நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேரும் சரணடைய வேண்டும். பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்தால் முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அம்பிகா முன்பு 15 பேரும் சரணடைந்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய ஜாமீன் மனு மீது நீதிபதி நேற்று மாலை வரை எந்த உத்தரவும் பிறக்கவில்லை. அதனால் இன்றைய தினம் அவர்களுடைய ஜாமீன் மனுவை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications