பல மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தும் செந்தில் பாலாஜி ‘மிட் நைட்டில் கைது’ ஏன்? கொந்தளித்த ஜோதிமணி!
கரூர்: பல மணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசரம் என்ன என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்திலுள்ள அவரின் அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையைத் தொடர்ந்து நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கரூர் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி துன்புறுத்தப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் இதயமான தலைமை செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தும், வேண்டிய பல மணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசரம் ஏன்?

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications