தரையில் படுத்து உறங்கி.. லேப்டாப்போடு வேலையை தொடங்கிய ஜோதிமணி.. கரூர் கலெக்டர் ஆபிசில் போராட்டம்!
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள் (ADIP) என்ற திட்டம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ADIP திட்டத்தின் கீழ் நாடு முழுக்க மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், மூன்று சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கரூரில் மாவட்ட ஆட்சியர் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கரூர் எம்பி ஜோதிமணி கண்டறித்து அதற்கான பட்டியலை அளித்தும் கூட ஆட்சியர் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.

கரூர்
இது தொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி வைத்துள்ள புகாரில், ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார். கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது? ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளேன்., என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு
இந்த திட்டத்தை செயல்படுத்தும்படி ஜோதிமணி கூறிய நிலையில் அதற்கு கரூர் ஆட்சியர் மறுப்பு தெரிவித்தாக ஜோதிமணி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்துதான் ஜோதிமணி தற்போது போராட்டம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று போராட்டத்தை தொடங்கிய கரூர் எம்.பி. ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து தலைமைச் செயலர் இறையன்புவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.

திட்டம்
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஆட்சியர் தடுக்கிறார். அவர் முறைகேடுகளில் ஈடுபடுவதால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கரூர் எம்.பி. ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து கரூர் எம்.பி. ஜோதிமணியை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர் அவரை சமாதானப்படுத்த முயன்றார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முகாம்கள் கூடிய விரைவில் நடத்தப்படும் என்று கூறினார்.
|
போராட்டம் தொடரும்
அவரின் வாக்குறுதியை ஏற்காத ஜோதிமணி அங்கேயே தொடர்ந்து தர்ணா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அதோடு உடனே மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாம் தேதிகளை அறிவித்தால் போராட்டத்தை கைவிடுவேன் என்றும் ஜோதிமணி அறிவித்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு ஆட்சியர் அலுவலகத்திலேயே உறங்கி அங்கேயே ஜோதிமணி போராட்டம் செய்தார். அதோடு அங்கேயே லேப்டாப் மூலம் தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார்.

ட்வீட்
இது தொடர்பாக ஜோதிமணி செய்துள்ள ட்வீட்டில், எனது தொகுதி மக்களுக்காக என்னால் போராடிப் பெற்று வரப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ADIP முகாம் நடத்துவதற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளிக்கும் வரையில் எங்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடரும், என்று கூறியுள்ளார். ஜோதிமணியுடன் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் உடன் இருக்கிறார்கள். இவர்கள் இங்கேயே தங்கி போராட்டம் செய்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்சியர் உறுதி அளிக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications