கரூர் துயரம்: கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?.. ஏடிஜிபி டேவிட்சன் கொடுத்த பதில்
கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சபவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். விஜயைக் காண்பதற்காகவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் பிரச்சாரம் நடக்கும் ஊர் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அவரைக் காண மக்கள் திரண்டு வருகின்றனர். நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விஜய் பிரச்சாரத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் பிரச்சாரப் பகுதியில் காலை முதலே திரண்டிருந்தனர். பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை இரவு முதல், சனிக்கிழமை காலை முதலே என விஜயைக் காண்பதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். ஒருகட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
விஜய் பேசப் பேசவே பலரும் மயக்கமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விஜய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விஜய் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு மேலான பிறகு விஜய் அறிக்கை வெளியிட்டது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்காமல் விமானம் மூலமாக சென்னை சென்ற சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கரூர் மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் கூட்டத்திற்குத் தேவையான பாதுகாப்புகள் தரப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு, ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகே அடுத்தட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications