விஜய் பேருந்தை முன்பே நிறுத்த சொன்னோம்.. ஆதவ் அர்ஜூனா கேக்கல.. நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு வாதம்
கரூர்: கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் கேரவனுக்குள் சென்றதும் ஒரு காரணம் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாலம் இருப்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும், விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என்றும் போலீஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும் கூட்டம் அளவு கடந்து சென்றதும் விஜய் பிரசார பேருந்தை முன்பாகவே நிறுத்த சொல்லி நாங்கள் கூறினோம்.. ஆனால் ஆதவ் அர்ஜூனா இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தவெக பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இதுவரை 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இன்று இவர்கள் இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி பரத்குமார் அவர்களிடம் உங்களை யாரும் அடித்தனரா என்று மதியழகன் மற்றும் பவுன்ராஜிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்தனர். பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் தண்டபாணி ஆஜராகி தனது தரப்பு வாதத்தை வைத்தார்.
அப்போது அவர் "கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. ஆனால் தவெக நிர்வாகிகள் பின்பற்றவில்லை. கரூர் சம்பவத்தில் சிகிச்சை பெற்று வருவோரில் மேலும் சிலர் இறக்க நேரிடும் என்பதால் மேலும் சிலரை கைது செய்ய வேண்டி இருக்கிறது" என்று கூறினார்.
அப்போது தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை நியமித்து இருக்கிறது. அந்த ஆணையத்தின் விசாரணை வரும் வரை யாரையும் கைது செய்யக் கூடாது. விஜய் பிரச்சாரத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் தானாக வந்த கூட்டம்தான். யாரையும் வண்டி வைத்து அழைத்துவரவில்லை.
விஜய் பரப்புரைக்கு பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி, லைட் ஹவுஸ் பகுதி, உழவர் சந்தை பகுதியை கேட்டிருந்தோம். ஆனால் போலீஸாரோ அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதாவது லைட் ஹவுஸ் பகுதியில் பேசிவிட்டு உழவர் சந்தை வழியாக சென்றால் அங்கு 60 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் பேர் வரை இருந்தாலும் அந்த கூட்டம் எளிதாக கலைந்து சென்றிருக்கும்.
ஆனால் எங்களுக்கு அங்கு அனுமதி தரவில்லை. ஒரே இடம் தான் தருவோம்.. கூட்டம் நடத்தினால் நடந்துங்கள் என்று கறார் காட்டினர். முதலில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றுதான் அனுமதி கேட்டிருந்தோம்" என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "காலாண்டு விடுமுறை, வார விடுமுறை எனும் போது விஜய்யை பார்க்க குறைந்த அளவு கூட்டம் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள்" என கேள்வி எழுப்பினார்.
காவல்துறை தரப்பில், கரூர் ரவுண்டானா லைட் ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் பங்குகள் இருப்பதால் அந்த பகுதியை கொடுக்கவில்லை. மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியை நேரில் ஆய்வு செய்து தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஒப்புதலோடு தான் அந்த இடம் ஒதுக்கப்பட்டதுதாக கூறினர்.
மேலும் விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம். கால தாமதமாக வந்தது மட்டும் இன்றி, விஜய் வாகனம் ராங் ரூட்டில் வந்தது. பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதும் கூட்ட நெரிசலுக்கு காரணம். மேலும் கூட்டம் அளவு கடந்து சென்றதும் விஜய் பிரசார பேருந்தை முன்பாகவே நிறுத்த சொல்லி நாங்கள் கூறினோம்..
ஆனால் ஆதவ் அர்ஜூனா இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்று எங்கள் பேச்சை கேட்காமல் மறுத்துவிட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications