என்னை பற்றி பாடும்போது செருப்பு வந்ததா? அன்றிரவு என்ன நடந்தது? நிமிடவாரியாக விளக்கிய செந்தில் பாலாஜி
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். இதில் சதி இருப்பதாக தவெக புகார் கூறி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக விஜய் வந்தது, பேசியது, சென்றது என நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நிமிடவாரியாக விளக்கியுள்ளார் செந்தில் பாலாஜி.
கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை பகுதியில் அதிகபட்சமாக 2000 முதல் 5000 நபர்கள் மட்டுமே நிறுத்த முடியும். பொதுவாக கூட்டம் நடத்தும் போது அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார வாகனத்தின் முன் சீட்டில் அமர்ந்திருப்பார்கள்.
கூட்டம் அதிகமாக இருந்தால் வாகனத்தின் மேலே ஏறி நின்று கையசைப்பார்கள். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு 500 மீட்டர் முன்பாக வாகனத்தின் உள்பகுதிக்குள் சென்றுவிட்டார். அந்த வாகனம் செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

கரூர் கூட்ட நெரிசல்
காவல்துறையினர் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இந்தப் பகுதியிலேயே நின்று பேசி விடலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அப்பொழுதும் அவர்கள் கேட்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்துவோம் எனவும் வரும் வழியிலேயே தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு வந்திருந்தால் கூட்ட நெரிசல் அதிகமாகி இருந்திருக்காது. அவரைப் பார்ப்பதற்காகச் சென்ற பொழுதுதான் கூட்ட நெரிசல் அதிகமாகிவிட்டது. அந்த 500 மீட்டர் தூரத்தில் அவர் மேலே ஏறி கையசைத்திருந்தாலோ அல்லது வாகனத்திற்குள் அமர்ந்து கையசைத்திருந்தாலோ இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.
செந்தில் பாலாஜி விளக்கம்
அதிமுகவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டம் நடத்தி இருந்தனர். அப்பொழுதுகூட 15,000 பேர் வந்திருந்தனர். ஆனால் இது போன்ற கூட்ட நெரிசல் வரவில்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கும்பொழுது கருத்து சொல்வது ஏற்புடையது அல்ல. உங்களைப் பற்றி பேசும் போது, உங்களைப் பற்றி பாடும் போது செருப்பு வீசப்பட்டது என வாகனத்தின் மேலே நின்று 19 நிமிடங்கள் தான் பேசினார்.
த.வெ.க கூட்டம்
பேசத் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டது. அதே போன்று 6.40 நிமிடத்தில் மீண்டும் செருப்பு வீசப்பட்டது. எந்த நிமிடத்தில் எந்த சம்பவம் நடந்தது என்று கூட தெரியாமல் சமூக வலைத் தளங்களில் செய்யக் கூடிய தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், செய்யக் கூடிய தவறுகளை சரி செய்யப் பார்க்காமல், இந்த தவறுக்கு அரசின் மீது திருப்பி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
விஜய் பிரச்சாரம்
என்னைப் பற்றி பேசும்பொழுது 16-வது நிமிடத்தில் பேசுகிறார். 17-வது நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொள்கிறார். இரண்டு வாகனங்கள், அவர்களுடைய ஆம்புலன்ஸ் வாகனம் நாமக்கல்லில் இருந்து அவர்களுடன் வருகிறது. த.வெ.க. கட்சியின் மருத்துவர் அணி சார்பில் ஐந்து வாகனங்கள் கரூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் அதில் ஏழு வாகனங்கள் அவர்கள் ஏற்பாடு செய்தது. பிரேத பரிசோதனை முடிந்து உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றும்பொழுதுதான் எங்களுடைய நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர் ஒட்டி ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications