அழாதீங்க மா.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்பி நேரில் ஆறுதல்
கரூர்: விஜய்யின் கரூர் பரப்புரையில், 20 பேருக்கு ஒரு காவலர்கள் வீதம் நியமிக்கப்பட்டனர் என்றும் அப்படி இருந்தும் இப்படி ஒரு துயரமான சம்பவம் நடந்துவிட்டது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். நேற்று மாலையில் கரூருக்கு சென்ற கனிமொழி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மு.க ஸ்டாலின், உதயநிதி
இந்த சம்பவம் ஒட்டுமொத்தம் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தமிழக அரசு செய்துள்ளது. கூட்ட நெரிசலில் பலர் பலியானதாக தகவல் கிடைத்ததும், விரைவாக கரூர் புறப்பட்டுச் சென்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சிகிச்சை பெறுபவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சைகளை வழங்க அறிவுறுத்தினார். இதேபோல் துபாய் சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து விட்டு சென்னை திரும்பினார். நேற்று காலை கரூர் வந்து சேர்ந்ததும் நேராக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன கனிமொழி
இந்த நிலையில் நேற்று மாலையில் திமுக எம்பி கனிமொழி கரூருக்கு வருகை தந்தார். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது மனவேதனையில் அழுதுகொண்டிருந்த பெண்ணிடன், அழாதீங்க மா.. என்று சொல்லி ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, 20 பேருக்கு ஒரு காவலர்கள் வீதம் நியமிக்கப்பட்டனர் என்றும் அப்படியும் இப்படி ஒரு துயரமான சம்பவம் நடந்துவிட்டது என்று தெரிவித்தார். கனிமொழி எம்பி கூறியதாவது:-
கீழ்த்தரமான விமர்சனங்கள்
நான் அரசியல் பேச விரும்பவில்லை.. யார் மீது பழி போடுவது என்றெல்லாம் நாங்கள் நினைக்க வில்லை. அப்படி நினைத்து இருந்தால் முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்க மாட்டார். எங்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்க மாட்டார்கள்.
யார் கட்சி என்பதெல்லாம் இங்கு தேவையில்லை.. இதில் என்ன சதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.. தமிழக மக்களை பாதுகாப்பது முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பு.. அரசியல் காழ்ப்போடு, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.. பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.
20 நபர்களுக்கு ஒரு போலீஸ்காரர்
10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியிருக்கிறார்கள். 20 நபர்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்தில் தான் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் இப்படி ஒரு துயரச் சம்பவம் அரங்கேறிவிட்டது. எல்லா கட்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. திமுக முப்பெரும் விழாவிற்கு கூட கட்டுப்பாடுகள் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications