மதிமுக உருவாக முதல் விதை- வைகோவுக்காக முதலில் தீக்குளித்த நொச்சிப்பட்டி தண்டபாணி வீட்டில் துரை வைகோ!
கரூர்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி உருவாக அடித்தளமாக இருந்தது நொச்சிப்பட்டி தண்டபாணி என்ற இளைஞனின் தீக்குளிப்புதான். வைகோவுக்காக முதன் முதலில் தீக்குளித்த நொச்சிப்பட்டி தண்டபாணி வீட்டுக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
1993-ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். எம்ஜிஆருக்குப் பின்னர் திமுகவில் வைகோ நீக்கம்தான் பெரும் செங்குத்து பிளவை ஏற்படுத்தியது.

நொச்சிப்பட்டி தண்டபாணி
திமுக தலைமை வைகோ மீது நடவடிக்கை எடுத்தததைக் கண்டித்து அடுத்தடுத்து தொண்டர்கள் தீக்குளித்து மாண்டு போயினர். அப்படியான தீக்குளிப்பு சம்பவங்களின் முதல் விதை நொச்சிப்பட்டி தண்டபாணிதான்.. அந்த மதிமுக தியாகியின் வீட்டுக்கு சென்ற நிகழ்வை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ.

நொச்சிப்பட்டி தண்டபாணி வீட்டில்..
துரை வைகோவின் பதிவு: தலைவர் வைகோ அவர்களுக்காக, முதல் உயிர்த்தியாகம் செய்தவர் நொச்சிப்பட்டி தண்டபாணி. 1993 ஆம் ஆண்டு, அக்டோபர் 10 ஆம் தேதி தனது தேக்குமர தேகத்திற்கு தீ மூட்டி மறுமலர்ச்சி தி.மு.க உதயமாவதற்கு வித்திட்ட நொச்சிப்பட்டி தண்டபாணியின் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

அக்.10 சூளுரை நாள்
நொச்சிப்பட்டி தண்டபாணியின் அண்ணன் குணசேகரன், அவரது சித்தப்பாவும் கழகத்தின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினருமான பெரியவர் சு.சீனிவாசப்பெருமாள் மற்றும் அவர் குடும்பத்தார் அனைவரிடமும் உரையாடி மகிழ்ந்தேன். அக்டோபர் 10 ஆம் தேதி கழகத்தின் சூளுரை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நொச்சிப்பட்டி தண்டபாணியின் நினைவு கம்பத்தில் கழக கொடியினை உயர்த்தி வைத்தேன். இவ்வாறு துரைவைகோ கூறியிருக்கிறார்.

தொடரும் சந்திப்பு
கடந்த செப்டம்பர் மாதமும் இதேபோல மதிமுகவுக்காக தீ குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட, தியாகிகளின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கத் திட்டமிட்டு இருந்தேன். அதன்படி, அருகில் உள்ள நாகநல்லூர் கிராமத்தில் வசிக்கும் உப்பிலியாபுரம் வீரப்பன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். வீரப்பன் அவர்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களின் நலனை கேட்டு அறிந்தேன். வீரப்பன் அவர்களின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் அந்த வீட்டில் வசித்து வருகின்றார்கள். வீரப்பன் அவர்களின் மகள் கண்ணகி அவர்கள், பல வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டார். மகள் வழி பேரன்கள் இருவர் இருக்கிறார்கள். உப்பிலியாபுரம் வீரப்பன் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன் என பதிவிட்டிருந்தார் துரை வைகோ.












Click it and Unblock the Notifications