"உங்க பொய் இங்க எடுபடாது.. குஜராத்தை பற்றி பேசுவோமா?” - பாஜகவிற்கு செந்தில் பாலாஜி வைத்த குட்டு
கரூர்: நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டை குறைகூறும் கட்சி, தாங்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதை மறைத்து பேசி வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி பொதுமக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் மின் தடை
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக தற்போது சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

பொய் பிரச்சாரம்
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், பாஜக ஆளும் குஜராத்தில் அதை விட குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலத்தில்
தொடர்ந்து பேசிய அவர், நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டை குறைகூறும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் விநியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை மறந்து மறைத்து பொய் பேசி வருகின்றனர். இந்த பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு பதில்
இந்தியாவில் வேறு எங்கும் மின் வெட்டு இல்லாதபோது தமிழ்நாட்டில் மட்டும் மின் வெட்டு ஏற்படுகிறது என்றும், செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, அதன் மூலமாக தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி லாபம் பார்ப்பது திமுகவுக்கு கைவந்த கலை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து வந்தார். அவருக்கு பதிலடியாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று குஜராத்தின் நிலை குறித்துப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications