"இயற்கையையும்,இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன்.." சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி- எதற்கு தெரியுமா?
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியில் நேற்று மட்டும் சுமார் 115 இடங்களில் ரூ. 38 கோடியே 24 லட்சம் மதிப்பில் நடைபெற இருக்கும் திட்டப் பணிக்கு மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைக் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் வகையிலும், காசநோய் இல்லா தமிழகம் 2025 ல் உருவாக்கும் இலக்குடன் நடமாடும் நுண் கதிர் பரிசோதனை வாகனத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

வேக்சின் பணிகள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் வேக்சின் பணிகளை மக்கள் இயக்கமாக எடுத்துச் சென்று செயல்பட வேண்டும். கரூர் மாவட்டத்தில் இதுவரை 93 சதவீதம் பேர் முதல் டோஸ் ஊசி செலுத்தப்பட்ட உள்ளது. இதை மேலும் வேகப்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

மருத்துவ உட்கட்டமைப்பு
கடந்த காலம் போல் இல்லாமல் கொரோனா சிகிச்சை முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கையாகச் செய்திட வேண்டும் முதல்வர் அறிவுறுத்து உள்ளார். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 1481 படுக்கை தயார் நிலையில் உள்ளது.

படுக்கைகள்
இதில் 936 படுக்கைகள் ஆக்சிசன் வசதியுடன் தயார்நிலையில் உள்ளது. இதில், தீவிர சிகிச்சைப்பிரிவில் 84 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், சாதாரண படுக்கைகள் 461 உள்ளது. இதுதவிர 3 இடங்களில் 540 படுக்கைகள் அமைத்துச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், 200 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இயற்கையை & இறைவன்
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒமிக்கரான் தொற்று பாதிப்பு இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை. அதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாருக்கும் ஒமிக்கரான் பாதிப்பு ஏற்பட வேண்டாம் என இயற்கையையும், இறைவனையும் வேண்டிக் கொள்வோம்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்
Recommended Video

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை மொத்தம் 179 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 10,978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்க தமிழக அரசு இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications