அதிகாலை நேரத்தில் திடீர் ஆய்வு.. தூய்மை பணியாளர்களுடன் டீ குடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர்: கரூர் நகராட்சி பகுதிகளில் அதிகாலையில் திடீர் ஆய்வு செய்த மின்சார துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி, அப்போது பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
Recommended Video
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை V செந்தில் பாலாஜி கரூர் நகராட்சி 18 வது வார்டிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
வீதி வீதியாக நடந்து சென்று கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், குப்பைகளை அகற்றி வீதிகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப்பணிகள் நடைபெற்றுவருவதை அமைச்சர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு
கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் 'மாபெரும் தூய்மைப்பணி இயக்கத்தை' மின்சாரம் துறை அமைச்சர் v செந்தில் பாலாஜி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கரூர் நகரம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த மாபெரும் தூய்மைப்பணியில் கரூர் நகராட்சியில் உள்ள 837 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரூரில் அமைச்சர்
ஒவ்வொரு வார்டு வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் தூய்மைப்பணியாளர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கான மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (10.10.2021) அதிகாலை சுமார் 5 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் நகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், என்.வி.சாலை, காந்திபுரம், பழனியப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

தேநீர் அருந்தினார்
வீதி வீதியாக நடந்து சென்று கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடியாகல்கள் தூர்வாருதல், குப்பைகளை அகற்றி வீதிகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப்பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஒரு தேநீர்க் கடையில் தூய்மைப்பணியாளர்களுடன் அமர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தேநீர் அருந்தினார்.

அமைச்சர் பேச்சு
அப்போது அவர் பேசுகையில், "பொதுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ உங்களின் அளப்பரிய, அர்ப்பணிப்பு மிக்க பணி மிகவும் இன்றியமையாதது. தன்னலம் கருதாது தினந்தோறும் குப்பைகளை அகற்றி, தெருக்களைச் சுத்தம் செய்து, கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர்வாரி போற்றத்தகுந்த பணியினை மேற்கொண்டு வரும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களது கோரிக்கைகள் ஏதுவாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள். உடனுக்குடன் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகராட்சி பொறியாளர் நக்கீரன், நகர்நல அலுவலர் மருத்துவர் லட்சியவர்ணா மற்றும் பலர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications