பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? மெடிக்கலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. கரூரை கதிகலங்க வைத்த சம்பவம்!
கரூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கரூரில் மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவமும், அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என தமிழக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பள்ளி செல்லும் சிறுமிகள் தொடங்கி, இளம் பெண்கள், மூதாட்டி வரை திருட்டு வழிப்பறி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டி படுகொலை, மதுரையில் சாலையில் நடை பயிற்சி சென்ற இளம் பெண்ணிடம் இருசக்கர வாகன ஓட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மதுரையில் காதலிக்க மறுத்த பெண் மீது தாக்குதல், என அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனியாக காவல்துறை பாதுகாப்பு போட முடியாது என்றாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் ஒருவர் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையும், அவருக்கு தரும் தண்டனையும் இது போன்ற குற்ற செயல்களை செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமையும். இதனால் குற்ற செயல்கள் குறையும் எனவே காவல் துறையும் தமிழ்நாடு அரசும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில் கரூரில் மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவமும், அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் திருச்சி சாலையில் காந்திகிராமத்தில் பெண் ஒருவர் மருந்து கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு 12 மணி வரை அந்த மருந்து கடை செயல்படுவது வழக்கம்.
பொதுவாக ஒன்பது மணி வரை அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் 10 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 10 மணிக்கு மேல் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததை இளைஞர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அந்தப் பெண் மெடிக்கலில் நின்றிருந்த போது இளைஞர் ஒருவர் மருந்து கடைக்கு மருந்து வாங்குவது போல வந்துள்ளார். சிறிது நேரம் பேச்சு கொடுத்து விட்டு வயிற்று வலிக்கு மருந்து வேண்டும் என கேட்டுள்ளார்.
இதை அடுத்து அந்த பெண் மருந்தை எடுத்து வந்து இளைஞரிடம் கொடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞர் பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முற்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது தங்க செயின் இளைஞரின் கையை விட்டு விலகியது. தொடர்ந்து அந்த பெண் கூச்சல் போட்ட நிலையில் செயினை பறிக்க முயன்ற இளைஞர் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள தான்தோன்றி மலை காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications