சவுக்கு சங்கரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.. மருந்துகள் கொடுப்பதில்லை.. வழக்கறிஞர் பரபர பேட்டி
கரூர்: புழல் சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதை செய்யப்படுகிறார். அவர் உடல் நிலை மோசமடைந்துள்ளது. சவுக்கு சங்கர் மீது பொய் வழக்காக போட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு அலைய விடுகிறார்கள். அவர் சுகர் பேசண்ட் என்ற போதும் மருந்துகள் கொடுப்பதில்லை என அவரது வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 43) என்பவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது அவர் என்னிடம் ஆன்லைனில் முதலீடு செய்வது பற்றியும், இதன்மூலம் அதிகமாக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ரூ. 7 லட்சம் பெற்று பின்னர் மோசடி செய்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விக்னேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சவுக்கு சங்கரின் இணையதளத்தில் தான் விக்னேஷ் வேலை செய்து வந்ததாகவும், கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் தான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீசார் கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை கரூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். போலீஸ் தரப்பில் 7 நாட்கள் கேட்டிருந்த நிலையில் நீதிபதி 4 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணன் கொடுத்த வழக்கிற்கும் சவுக்கு சங்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சவுக்கு சங்கர் மீது பொய் வழக்காக போட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு அலைய விடுகிறார்கள் என்றும் அவர் சுகர் பேசண்ட் என்ற போதும் மருந்துகள் கொடுக்கமாட்டேங்கிறாங்க என அவரது வக்கீல் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இன்றைக்கு வரைக்கு சவுக்கு சங்கருக்கு டிரஸ் கொடுக்கவில்லை. படிப்பதற்கு புக் கொடுக்கவில்லை. மெடிசன்கள் எதுவும் கொடுக்கவே இல்லை. பொய் வழக்காக போட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு அலைய விடுகிறார்கள். இன்றைக்கு 7 நாட்கள் கஸ்டடி கேட்டிருந்தார்கள். 4 நாட்களுக்கு கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது. சவுக்கு சங்கர் வெளியில் யாரிடமும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
பொய்வழக்காக போடுகிறார்கள். எல்லாத்தையும் சந்திக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. சுகர் இருக்கிறது. எந்த வித ட்ரீட்மெண்டும் கொடுக்கவில்லை. மருந்துகளும் கொடுக்கவில்லை. இதனால் ரொம்ப வீக்காக இருக்கிறார். ரொம்ப மன அழுத்தத்தில், வருத்தத்தில் இருக்கிறார். இந்த வழக்குக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
புழல் சிறையில் சவுக்கு சங்கர் மிகவும் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு கையில் கட்டு போட்டிருக்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்த கை வீங்கி இருக்கிறது. அந்த கட்டை அவிழ்பதற்கு கூட ஜெயிலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications