Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.. 2 உணவகங்களிலும் ரெய்டு!
கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கரூர் - கோவை சாலையில் செயல்பட்டு வரும் கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் ஆகியவற்றிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அத்தனை கட்சிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, டோக்கன் விநியோகம் உள்ளிட்ட விஷயங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், அரசு ஒப்பந்தத்தாருமான சங்கர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலகங்களிள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கரூர் - கோவை சாலையில் செயல்பட்டு வரும் கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் ஆகியவற்றிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முறை கரூரில் இருந்து செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறி இருக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் கடந்த முறை திமுக பெயரளவிலான வெற்றியை மட்டுமே பெற்றது. இந்த முறை செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்து திமுக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப கோவையில் சில தொகுதிகளில் திமுக வெல்வதற்கான சூழல் கனிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருவது பேசுபொருளாகி இருக்கிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு நெருக்கமாக இருப்போவின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications