செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் புது வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு.. விடாது விரட்டும் அதிகாரிகள்
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்து மதிப்பிட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண வசூல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இதற்கு மத்தியில், கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. அதுகுறித்து அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார்.
கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கரூர் ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார். அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார் அசோக்.
அசோக்கின் தலைமறைவு காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த 6 மாதங்களாகவே இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.
இந்த நிலையில் கரூர் நாமக்கல் புறவழிச்சாலை ராம் நகரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் இன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்யும் பணிகள், இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications