கரூரில் வீடு தேடி வரும் தங்கம், வெள்ளி.. மக்கள் இன்ப அதிர்ச்சி
கரூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடே உற்று நோக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்ற வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும், ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லுகட்டி கொண்டிருக்கிறார்கள்.

கரூர் அரசியல் களம்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை 7 மணியில் இருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இந்த தேர்தலிலும் பணப்பட்டுவாடா அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்து வருகிறது.
கரூர் தொகுதியில் திமுக சார்பில் தியாகராஜன், அதிமுகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்கள். செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் கரூரில் வெற்றி பெற அதிமுக தீவிரம் காட்டுகிறது. ஆனால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போல இந்த முறையும் கரூரில் உள்ள 4 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது.
தங்கம் வெள்ளி பட்டுவாடா
கரூர் தொகுதியில் திமுக சார்பில் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000, அதிமுக சார்பில் ஒரு வாக்குக்கு ரூ.3,000 பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறினார்கள். இந்நிலையில் கரூர் தொகுதியில் நேற்று திமுக சார்பில் ஒரு கிராம் தங்க நாணயம் வீடு வீடாக பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல அதிமுக சார்பில் வீடு வீடாக வெள்ளி நாணயம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கரூர் மக்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கரூர் சுயேச்சை வேட்பாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications