7.5% இட ஒதுக்கீடு: கரூர் அரசு பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சீட்! கனவு பலித்ததாக பேட்டி!
கரூர்: அரசுப்பள்ளியில் படித்த கரூர் கல்லுபாளையத்தை சேர்ந்த மாணவி ஹரிணிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. சீட் கிடைத்தது குறித்து கரூர் மாணவி, ''ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்'' என்ற ஆசையை தெரிவித்துள்ளார்.
எம்.பி.பிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை மூலம் இந்த ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் 17.64 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது. தமிழகத்தை பொருத்த வரை அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது
இந்த உள் இட ஒதுக்கீட்டில் 459 எம்.பி.பி.எஸ் இடங்கள், 106 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 565 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ல கல்லு பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சேகர் என்பவரின் மகள் ஹரிணிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சி
நீட் தேர்வில் 292 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய ஹரிணி, அப்பகுதியில் உள்ள அரங்கநாதன் பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்தார். அரசுப்பள்ளியில் பயின்று எளிய பின்னணியை கொண்ட மாணவியான ஹரிணிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்ததால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாணவி ஹரிணி பேட்டி
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்தது பற்றி மானவி ஹரிணியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக ஹரிணி பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- ''ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை எனது சொந்த ஊரில் உள்ள கல்லுபாளையம் அரசு பள்ளியில் படித்து விட்டு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்.

ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
சிறிய வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதற்காக நீட் தேர்வில் முழு கவனத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். இப்போது திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படிக்க சீட் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications