TCS அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் ஹேப்பி.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் கண்ணீர்.. ஏன்?
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது. சொன்னப்படியே தனது ஊழியர்களுக்கு நேற்று முதல் தகுதியான அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கடிதத்தை ஈமெயில் வாயிலாக வெளியிட்டு வருகிறது.
இதன் படி இந்த ஆண்டு டிசிஎஸ் சராசரியாக 5 சதவீத சம்பள உயர்வு அளித்துள்ளது. மே 18 அன்று நடைபெற்ற ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டுச் செயல்முறையின் முடிவில் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் 5,84,519 ஊழியர்களும் சம்பள உயர்வு பெற்று அவர்களின் சம்பள உயர உள்ளது.

செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு
டிசிஎஸ் சம்பள உயர்வை ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக (A+, A, B, C) பிரித்து வழங்கியுள்ளது.
A+ பிரிவு ஊழியர்களுக்கு 9 முதல் 13 சதவீதம் வரை உயர்வு
A பிரிவு ஊழியர்களுக்கு 5 முதல் 9 சதவீதம் வரை உயர்வு
B பிரிவு ஊழியர்களுக்கு 1 முதல் 3.5 சதவீதம் வரை உயர்வு
C பிரிவு ஊழியர்களுக்கு மிகக் குறைவான அல்லது சில ஊழியர்களுக்கு எதிர்மறையான சம்பள உயர்வு இருக்கும். அதாவது சம்பளம் குறைக்கப்படும்.
இந்த ஆண்டு சராசரியாக A+ பிரிவில் வந்துள்ள ஊழியர்களுக்கு 10 சதவீதமும், A பிரிவினருக்கு 7 சதவீதத்திற்கு மேல், B பிரிவினருக்கு 3 சதவீதமும் மற்றும் C பிரிவினருக்கு 0.3 சதவீதம் மட்டுமே உயர்வு கிடைத்துள்ளது.
டிசிஎஸ் சிஇஓ சம்பளம்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.கிருதிவாசன், 2026ஆம் நிதியாண்டில் மொத்தம் 28.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது முந்தைய நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகமாகும், கிட்டத்தட்ட சாமானிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக வழங்கப்பட்டு உள்ளது.
கிருதிவாசன் பெற்ற 28.1 கோடி ரூபாய் சம்பளத்தில் 1.67 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 1.43 கோடி ரூபாய் பலன்கள், சலுகைகள் மற்றும் படிகளாகவும், 25 கோடி ரூபாய் கமிஷனாகவும் பெற்றுள்ளார். இந்த சம்பளம் டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 332.8 மடங்கு அதிகமாகும்.
ஊழியர்கள் மத்தியில் கவலை
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிதாக மாற்றப்பட்ட சம்பள அமைப்பு மற்றும் வேரியபிள் பே தொகை (Variable Pay) குறித்து பல ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் மூலம் கையில் கிடைக்கும் சம்பள தொகை குறைந்துவிட்டதாக சிலர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் சம்பள உயர்வை ஒரு காலாண்டு தாமதமாக வழங்கிய டிசிஎஸ், இந்த ஆண்டு முதல் காலாண்டிலேயே அனைவருக்கும் சம்பள உயர்வை கொடுத்து ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
பிற ஐடி நிறுவனங்கள்
இதேவேளையில், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற பிற முன்னணி ஐடி நிறுவனங்கள் இன்னும் சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கவில்லை என்றும், நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளன. இதனால் பிற ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
டிசிஎஸ் மெகா பணிநீக்கம்
டிசிஎஸ் கடந்த நிதியாண்டில் சுமார் 23,460 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஊழியர்கள் வெளியேற்றமாக அமைந்தது. இந்த பணிநீக்கத்தில் பெரும்பாலான ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்காத மற்றும் தானாக முன்வந்து பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து வெளியேறியவர்கள் தான் அதிகம். இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் திறன் மேம்பாடு மற்றும் புதிய துறையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது.














Click it and Unblock the Notifications