தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது.. கரூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கிய SIT
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் அடைப்பதற்காக கரூர் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் வந்தார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களாக தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் தேடும் பணி துரிதபடுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் முன்ஜாமீன் கோரிய மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில், தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தனது உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நேரடியாக வருகை தந்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கரூரில் பிரசார பரப்புரை நடைபெற்ற நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வேகமாக இயக்கப்பட்டதாக தவெக நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் சமாதானம் செய்வதற்காக உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருந்த நபர்களைத் தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சேலத்தில் இருந்து இருவர் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, ஒருவரை இறக்கிவிட்டு, கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை மட்டும் கைது செய்து கரூருக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications