கரூர் தவெக கூட்டத்தில் ஆயுதங்களுடன் குண்டர்கள்! விஜய் மீது செருப்பு வீச்சு! புஸ்ஸி ஆனந்த் மனு
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கினர் என தனது முன்ஜாமீன் மனுவில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதாவது: முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் தவெக கூட்டத்திற்குள் நுழைந்து ஆயுதங்களால் தாக்கினர்.

கூட்டம் அதிகரித்ததும் சில குண்டர்கள் விஜய் மீது காலணிகளை வீசினர். நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் காவல் துறையால் அனுமதிக்கப்பட்டது என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதே போன்றதொரு மனுவை இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரும் தாக்கல் செய்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என 41 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோரில் லேசான காயமடைந்தவர்கள் மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்காமல், நேராக சென்னைக்கு கிளம்பி வந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை கைது செய்ய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கூட்டம் அதிகரித்துள்ளது குறித்து புஸ்ஸி ஆனந்திடமும் நிர்மல் குமாரிடமும் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டு அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் ஆனந்தும் நிர்மல் குமாரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கினர். காவல் துறை தடியடி நடத்தியதாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் நெரிசல் ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications