ஒரு இடம் விடலையே.. கரூரில் காலையிலேயே வேலையை காட்டிய பாஜக.. சீண்டப்பட்ட செந்தில் பாலாஜி.. என்னாச்சு?
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முக்கியமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாஜக ஒட்டி உள்ளது.
கொங்கு மண்டலத்தில் திமுக வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின்பாக கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுக்க திமுக வேகமாக வளர்ந்து உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுகதான் வென்றது. இதற்கு செந்தில் பாலாஜியின் வியூகம் மிக முக்கிய காரணம். முக்கியமாக கோயம்புத்தூரில் திமுகவின் வெற்றியை செந்தில் பாலாஜிதான் உறுதி செய்தார்.
சமீபத்தில் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடந்தது . அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜியின் இந்த அதிரடி அரசியலால் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் குழம்பிப் போய் இருக்கின்றன. இவரின் வியூகத்தை எதிர்கொள்ள முடியாமல் முக்கியமாக பாஜக கடுமையாக திணறி வருகிறது. இதையடுத்தே செந்தில் பாலாஜி மீது பாஜக தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையும் செந்தில் பாலாஜி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். ஏற்கனவே நிலக்கரி கொள்முதல் தொடர்பாக அண்ணாமலை செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்தார்.

குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி கைதுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அமலாக்கத்துறை டெல்லியில் பிசியாக இருக்கிறது. வடமாநிலங்களில் முடித்துவிட்டு அமலாக்கத்துறை தென் மாநிலங்களுக்கு வரும் என்று அண்ணாமலை பேசி இருந்தார். அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆளுநர் ஆர். என் ரவியை பார்த்து கோரிக்கை வைத்தார். செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் உள்ளது.

ஊழல்
அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஊழல் செய்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முக்கியமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாஜக ஒட்டி உள்ளது.

என்ன போஸ்டர்
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார் என்று குறிப்பிடும் விதமாக போஸ்டர்களை பாஜக ஒட்டி உள்ளது. 5000 கோடிக்கு அதிபர் செந்தில் பாலாஜி என்று கூறி போஸ்டர்களை ஒட்டி இருக்கிறது. கரூர் முழுக்க பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. சாலை சந்திப்புகள், தடுப்புகள், முக்கிய பாலங்களுக்கு கீழ் எல்லாம் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. கரூர் பாஜக என்று இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலை
அதிகாலையில் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பை இந்த போஸ்டர்கள் அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏரியா. அப்படி இருக்கும் போது அவரின் கோட்டையிலேயே பாஜக அவரை சீண்டி உள்ளது. இதற்கு தக்க பதிலடி தரப்படும் என்று செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications