கரூர் கோவிலில் மகனுடன் பிச்சை எடுத்த காவலர்.. சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்.. வெளியான தகவல்
கரூர்: கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 35 வயதாகும் பிரபாகரன் என்பவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த இரண்டு மாதம் முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்று கூறிவந்த காவலர் பிரபாகரன், 4 வயது மகனுடன் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து பிச்சை எடுத்தார். இதை பார்த்து ஆடிப்போன போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்த சென்றனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தெரியவந்துள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 35 வயதாகும் பிரபாகரன், கரூரில் உள்ள பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பசுபதிபாளையம் அருகே உள்ள சணப்பிரட்டி பகுதியில், 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண், வாலிபர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பிரபாகரன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அவருடன் கவுதமன் என்பவரும் சென்றாராம்.

கவுதமன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண்ணுடன் பேசி கொண்டிருந்த வாலிபரை பிரபாகரனும், கவுதமனும் மிரட்டி அங்கிருந்து அனுப்பியதுடன், பின்னர் இளம்பெண்ணிடம் அவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதனால் கடந்த 2 மாதங்களாக முழுமையாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகரன் நேற்று தனது 4 வயது மகனுடன் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்திருக்கிறார். அப்போது, திடீரென கோவில் முன்பு இருந்த மரத்தடியில் அமர்ந்து தான் வைத்திருந்த துண்டை விரித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சக போலீசார் அங்கு வந்து பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றார்கள். அப்போது, பிரபாகரன் நான் செய்யாத குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை இல்லாததால் பிச்சை எடுத்து அரிசி வாங்கி சாப்பிடும் நிலையில் இருக்கிறேன்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். இதனையடுத்து பிரபாகரனை சக போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதுகுறித்து கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு ஊடகங்களை அழைத்து தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பொய் வழக்கு போட்டு விட்டார்கள் என்றும் பிரபாகரன் கூறி உள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications