கதிர் ஆனந்த் வேலூர் திமுக வேட்பாளர்: தலைக்கு மேல் கத்தி.. அப்பா பேரைக் காப்பாற்றுவாரா மகன்?
வேலூர் திமுக வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் கதிர் ஆனந்த்.
வேலூர் : வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.
வேலூர் மாவட்டம் காந்திநகர் காட்பாடியைச் சேர்ந்தவர் கதிர் ஆனந்த் (44). திமுக பொருளாளர் துரை முருகனின் மகன். திமுகவில் அடிப்படை உறுப்பினர் என்பதைத் தவிர, இதுவரை அவர் நேரடி அரசியலில் தலைகாட்டியதில்லை.
தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவராக உள்ள கதிர், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகே, முதல்முறையாக நேரடி அரசியலில் நுழைந்திருக்கிறார்.
வரலாற்று தருணம்.. நாட்டின் முதல் லோக்பால் தலைவராக பதவியேற்றார் பினாகி சந்திரகோஷ்
திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள துரைமுருகனின் செல்வாக்கு, அரசியல் பலம், பண பலம், வன்னியர் ஓட்டுக்கள் என பல்வேறு பிளஸ்களை கருத்தில் கொண்டு, இம்முறை அவரது மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக்கப் பட்டிருக்கிறார்.
2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி. செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்று நூலிழையில் தனது வெற்றியை நழுவ விட்டார். அந்தத் தேர்தலில் திமுகவிற்கு மூன்றாவது இடம் தான் கிடைத்தது.
இந்நிலையில், இம்முறையும் வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரிடம் கடுமையாக முட்டி மோதும் நிலையில்தான் கதிர் ஆனந்த் இருக்கிறார். நேரடி அரசியலில் இறங்கி முதல் தேர்தலிலேயே கதிர் ஆனந்திற்கு பெரும் சவால் காத்திருக்கிறது.