கர்நாடகா சட்டசபை தேர்தல்: கோலாரில் சித்தராமையா போட்டி? இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு?
கோலார்: கர்நாடகா சட்டசபை தேர்தல் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கோலார் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஜேடிஎஸ் கட்சி தமது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவையும் படுமுனைப்புடன் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இம்முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும்; ஆனால் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகவும் பாஜக 2-வது கட்சியாகவும் இருக்கும் எனவும் அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவெடுக்குமாம். இதனால் மீண்டும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அமையும் என்கின்றன அக்கணிப்புகள்.

இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கோலார் சட்டசபை தொகுதிக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். கோலார் சட்டசபை தொகுதியானது தலித்துகள், குருபர்கள், முஸ்லிம்களை உள்ளடக்கியது. பாஜக இத்தொகுதியில் பலவீனமானது.
கோலார் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் சீனிவாச கவுடா எம்.எல்.ஏ.வாக இருந்தார். ராஜ்யசபா தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்ததால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இம்முறை சித்தராமையாவை ஆதரிக்கிறார் என்கின்றன தகவல்கள். ஆகையால் கோலார் தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக சித்தராமையா இன்று அறிவிக்கக் கூடும் என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications