சிற்பக்கலை தான் சிறப்பே! 600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கும்மாளாபுரத்தில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலை கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கும்மளாபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து இந்த கோவிலை கண்டறியந்துள்ளது. இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
கும்மளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியை ஆட்சி செய்த விஜயநகரர் காலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கருவறை அர்த்த மண்டபம், முக மண்டபம் அனைத்தும் கருங்கல் வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு மேல் உள்ள விமானப்பகுதி அண்மை காலத்தை சேர்ந்தது.
தற்போது அதிஷ்டானம் முழுவதையும் மறைத்து மேடாக்கி சுற்றி கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் தொடர்பான கல்வெட்டுகள் புதைந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த கல்வெட்டுகள் கிடைத்தால் கோவிலின் முழு வரலாற்றையும் தெளிவாக கூறலாம்.
நரசிம்மர் இரண்யனை தொடையில் கிடத்தி வதம் செய்தல், லட்சுமி நாராயணர், வேணுகோபால், நவநீத கிருஷ்ணன், ராமன், லட்சுமணன், சீதை உள்பட 16க்கும் மேற்கப்பட்ட சிற்பங்கள் கருவறை வெளிச்சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் சிறப்பு என்பது கருவறையை சுற்றி செதுக்கப்பட்டு இருக்கும் சிற்பங்கள் தான். கருட கம்பத்தின் பீட்ததின், 4 புறமும் இசைக்கருவிகளை வாசித்தபடி நடனமாடும் சிற்பங்களும் உள்ளன'' என்றார்.












Click it and Unblock the Notifications