விபத்து ஏற்படுத்தியதாக கிருஷ்ணகிரியில் பஸ்களை உடைத்த மக்கள்.. கடைசியில் பார்த்தால் உண்மை இதுதான்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் ஊராட்சி மன்ற கவுன்சிலரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 10 பேருந்துகளை உடைத்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (44). கட்டட மேஸ்திரியான இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். கலாவதி போடிச்சிபள்ளி ஊராட்சி மன்றக் கவுன்சிலராக உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளியான கணேஷ் (55). கணேஷின் மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

குமாரும், கணேஷும் நெருங்கிய நண்பர்களாவர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி செப்டம்பர் 20 ஆம் தேதி இரவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை குமார் ஓட்டியுள்ளார். அப்போது, ஓசூரில் இருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட கம்பெனி வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
அப்போது, கெலமங்கலம் கூட்ரோடு வழியாக குமார் சென்றபோது எதிரே ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவன வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். குமார் தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் முன்சக்கரத்தில் சிக்கி சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இதில், குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த கணேசை அப்பகுதியில் இருந்தவர் மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கணேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த கணேஷ் மற்றும் குமாரின் உறவினர்கள், கிராம மக்கள் சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டு தனியாக நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தையும், அந்த வாகனத்தை தொடர்ந்து வந்த அதே நிறுவனத்துக்குச் சொந்தமான 9 வாகனங்களையும் ஆத்திரத்தில் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை காவல் துறையினர் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர். அப்போது, கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் ஸ்பீடு பிரேக்கர்கள் இல்லாததால் டாடா தனியார் நிறுவன பேருந்துகள் அதிவேகமாகச் செல்கின்றன. அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர்.
இதேபோல, இப்பகுதியில் இந்த தனியார் பேருந்து நிறுவனங்கள் பல விபத்துகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் சாலையில் செல்லவே அச்சமாக உள்ளது. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் மற்றும் ஓசூர் உதவி ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், பேருந்து வந்து கொண்டிருக்கும்போது நான்கு புறச் சாலையில் இருந்து வேகமாக வரும் இருசக்கர வாகனம் பேருந்தில் மோதும் காட்சி பதிவாகியுள்ளது. 4 புறச் சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீதுதான் தவறு. சாலையில் நேராக வந்து கொண்டிருக்கும் பேருந்தை எப்படி சடன் பிரேக் போட்டு நிறுத்த முடியும். இது முழுக்க முழுக்க இருசக்கர வாகனத்தில் இருந்து வருபவர்களின் மேல் உள்ள தவறுதான் என்றும், பொதுமக்கள் 10 பேருந்துகளை அடித்து உடைத்த சம்பத்தைக் கண்டித்தும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications