கிருஷ்ணகிரியை கிறுகிறுக்க வைத்த சிவராமன்.. தந்தையும் மர்ம மரணம்! உடற்கூறு ஆய்வில் வெளிவந்த ரகசியம்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கிங்ஸ்லின் மேல்நிலைப் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், கைதான சிவராமன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் சிவராமனின் தந்தையான அசோக்குமாரும் மரணமடைந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அசோக்குமாரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கிங்ஸ்லி பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்தி இருக்கிறார்.

அதில் 19 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு மாணவியை சிவராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியில் மேலும் பல மாணவிகளை சிவராமன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராமன் மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை அடுத்து அந்த குழுவினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே சிவராமன் குடும்ப பிரச்சினை காரணமாக எலியை கொல்ல வைக்கப்படும் பசையை தின்று தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார் என கூறுகின்றனர் காவல்துறையினர்,
இந்த நிலையில் கைது நடவடிக்கையின் போது சிவராமன், போலீசாரை கண்டு தப்பியோட முயன்றதாகவும் இதை அடுத்து அவர் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவராமன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு இடையே சிவராமனின் தந்தை அசோக்குமார் நேற்று முன் தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளானர். மது போதையில் இருந்த அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழக எதிர்க் கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கூறியிருந்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் யாரையோ காப்பாற்ற சிவராமன் மற்றும் அவரது தந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அசோக்குமாரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் அவர் மதுபோதையில் சென்ற போது விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்து பலியானதாக கூறப்பட்டது.
இதற்கிடையே சிவராமனின் தந்தை அசோக்குமார் மாரடைப்பால் தான் மரணமடைந்ததாக அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிவராமனின் தந்தை அசோக்குமார் அதிகளவு மது அருந்தியதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறுகின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications