காலை பிடிச்சு கெஞ்சி கேட்கிறேன்..‘அந்த’ கட்சி மட்டும் நமக்கு வேண்டாம்! உணர்ச்சி பொங்க பேசிய அன்புமணி
கிருஷ்ணகிரி: தமிழகத்தின் கடன் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது எனவும், ஆந்திரா கர்நாடகத்தில் உள்ளது போல தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடை பயணத்தை மேற்கொண்டார்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் அவர்கள் முன் மேடையில் பேசிய அன்புமணி," இந்த நான்கரை ஆண்டுகள் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்காக அதிகரித்து உள்ளது.

அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டின் கடன் நான்கரை லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அந்த கடன் அளவு ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் கோடியாக மாறி உள்ளது. இவ்வளவு கடன் வாங்கி தமிழ்நாட்டில் எந்த கட்டுமானமும் வளர்ச்சியும் நடைபெறவில்லை. கடனை அடைக்க மேலும் மேலும் கடனை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் திமுகவிற்கு நிர்வாக திறன் இல்லை.. நிர்வாக திறமை இல்லை என்றால் திமுக வீட்டிற்கு செல்லலாம் இப்படி தமிழ்நாட்டை சீரழிக்க வேண்டாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை கொள்ளையோ கொள்ளை என கொள்ளை அடிக்கப்படுகிறது.
திமுக ஆட்சி
கிரானைட் மட்டும் இல்லாமல் ஆற்று மண், உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். துப்புரவு பணியாளர்கள் இல்லையென்றால் சென்னையே நாறிவிடும்.. 15 20 ஆண்டுகளாக பணி செய்து கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர்களை ஒரு நாளில் வீட்டுக்கு அனுப்பக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சிய இருக்கிறது. தங்களுடைய உரிமைக்காக போராடிய துப்புரவு பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்து அடைத்து வைத்த கொடுங்கோல் அரசு திமுக அரசு.
போதைப்பொருள் பிரச்சனை
தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களின் காலை பிடித்து கேட்கிறேன் மீண்டும் திமுகவை வரவைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு கொடுப்போம் என திமுக கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி ஆக கூட வரக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை.
வேலைவாய்ப்பு சட்டம்
ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என அம்மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சட்டம் இல்லை. 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக அதனை கொடுத்து இருந்தார்கள். ஆனால் தற்போது வரை அதனை நிறைவேற்றாதது ஏன்?
மாநிலக் கல்விக் கொள்கை
மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ் வழி கல்வி என்ற வார்த்தை கூட இல்லை. தமிழை வைத்து தான் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அந்த தமிழுக்காக திமுக எதையும் செய்யவில்லை..
சாதிவாரி கணக்கெடுப்பு
தமிழ்நாட்டில் 350 சாதிகள் உள்ளன அவர்களில் எந்தெந்த சாதிகள் இன்னும் முன்னேறவில்லை. யார் யார் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் யார் யாருக்கு கல்வி இன்னும் முழுமையாக பெறாமல் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். அதனை செய்யாமல் எப்படி சமூக நீதி வழங்க முடியும்? இது சாதி பிரச்சனை கிடையாது சமூக நீதிப் பிரச்சனை.
கர்நாடகத்தில் சித்தராமையா சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து இட ஒதுக்கீட்டை வழங்கி உள்ளார். ஆனால் திமுக ஏன் அதனை செய்ய மறுக்கிறது?" என்றார்.












Click it and Unblock the Notifications