கழுத்தில் பாஜக துண்டு.. எடப்பாடி பழனிசாமிக்காக சீருடையில் ரோட்டில் நிற்கவைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்!
கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அவரை வரவேற்க பள்ளி மாணவர்கள் சீருடையில் கழுத்தில் பாஜக துண்டு அணிவித்து நிற்க வைக்கப்பட்டிருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹல்லி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அவரை வரவேற்க சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் கழுத்தில் பாஜக துண்டுடன் சாலையில் நிற்க வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பொதுமக்களும், கட்சியினரும் திரண்டிருந்தனர். இதில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சீருடையில் நிற்க வைக்கப்பட்டிருந்துள்ளனர். பள்ளி மாணவர்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறியிருக்கிறது. இப்படி இருக்கையில், பாஜக துண்டு அணிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பள்ளி மாணவர்கள் ரோட்டில் நிற்க வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்வி நிலையங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் இப்படியான தேர்தல் நடத்தப்படுவதில்லை. மறுபுறம் பள்ளி மாணவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவை இரண்டும் முரண்பட்ட விஷயமாக இருப்பதாக கல்வியாளர்கள் கண்டித்துள்ளனர்.
மாணவர்களுக்கு அரசியல் அறிவு தேவை. அதை வழங்காமல் நேரடியாக அரசியல் களத்தில் பொம்மைகளாக நிறுத்தப்படுவத ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications