கிருஷ்ணகிரி அருகே மனைவியும் மாமியாரும் ஓங்கி அடித்த ஒரே அடி.. பஸ்ஸில் போகும் போதே.. சோகம்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குடும்ப தகராறில் மனைவியும் மாமியாரும் கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்ததில் காயம் அடைந்த கணவன், பேருந்தில் போகும் போதே சீட்டில் உயிரை விட்டார். இந்த விவகாரத்தில் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பலம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு என்பவருடைய மகன் விமல்குமார். கார் டிரைவரான விமலுக்கு 32 வயது ஆகிறது. விமலுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் கொடமாண்டப்பட்டியை சேர்ந்த பூர்ணிமா (32) என்பவருக்கும் கல்யாணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். பூர்ணிமா மற்றும் விமல் இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கமாம்.. இவர்களை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த பூர்ணிமா கணவரை பிரிந்து மகன், மகளை அழைத்து கொண்டு கொடமாண்டப்பட்டியில் உள்ள தனது தாயாரான அம்சவேணி வீட்டுக்கு போய்விட்டார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமல்குமார் தனது தாயார் மகேஸ்வரியுடன் மனைவி வீட்டுக்கு சமாதானம் செய்ய போயிருக்கிறார். பின்னர் தன் மனைவி பூர்ணிமாவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பூர்ணிமா, அம்சவேணி ஆகியோர் கிரிக்கெட் மட்டையால் விமல்குமாரை ஓங்கி ஓங்கி அடித்தனர். அப்போது அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி விமலையும் அவரது தாயாரையும் வீட்டுக்கு அனுப்பினர். பின்னர் விமல்குமார் தாயுடன் பலம்பட்டிக்கு புறப்பட்டுள்ளார்..
இருவரும் பேருந்தில் சிறிது தூரம் சென்ற நிலையில் விமல்குமார் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அவரை எழுப்ப முயன்றார். அதற்குள் விமல்குமார் இறந்து போனார். இதுகுறித்து மகேஸ்வரி போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்த விமல்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் மனைவி, மாமியார் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் விமல்குமார் இறந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நேற்று பூர்ணிமா, தாயார் அம்சவேணி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications