கேபி முனுசாமி சுளீர் கேள்வி.. நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை அப்படியே பார்த்த அதிமுக.. அதிர்ந்த பாஜக
கிருஷ்ணகிரி: மத்திய இணையமைச்சர் எல் முருகனை ஏன் ராஜ்யசபா எம்பியாக்கினீர்கள்.. தேர்தலில் நிற்க வைக்க வேண்டியது தானே.. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை தமிழ்நாட்டில் பாஜக களமிறக்க தயாரா? என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி ஒரு அணியாகவும், திமுக கூட்டணிகள் ஒரு அணியாகவும், பாஜக ஒரு அணியாகவும் போட்டியிட உள்ளது. தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் குதித்துவிட்டன கிருஷ்ணகிரி சூளகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசும் போது, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், மத்திய இணையமைச்சர் எல் முருகனை ஏன் ராஜ்யசபா எம்பியாக்கினீர்கள்.. தேர்தலில் நிற்க வைக்க வேண்டியது தானே.. ஏன் நிற்க வைக்கவில்லை.. நின்றால் ஜெயிக்க முடியாது என்று உங்களுக்கே தெரிகிறது... அப்புறம் ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்?
நான் இந்த மேடையில் அண்ணாமலை மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோரை கேட்கிறேன்... தமிழர்கள் இரண்டு பேர் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.. இன்னொருவர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்தவர்.. ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. இன்னொருவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. இவர்கள் இருவரையும் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலாவது நிற்க வையுங்கள்..
பாரதிய ஜனதாவிற்கு தில் இருந்தால், தைரியம் இருந்தால், தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலாவது நிறுத்துங்கள்.. தமிழக மக்கள் எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை அப்போது தெரிந்து கொள்வீர்கள்..
இது திராவிட மண்.. அண்ணாமலையை பார்த்து கேட்கிறேன்.. திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்துவிட்டதாக சொல்கிறீர்களே.. தமிழகம் இன்றைக்கு எல்லா துறையிலும் முதன்மை மாநிலமாக இருக்கிறது.. சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முதன்மையான மாநிலம்.. கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்.. நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்.. விவசாயத்தில் விளைபொருட்கள் விஷயத்திலும் தமிழ்நாடு முதன்மை மாநிலம்..
உங்களுடைய ஆட்சி (பாஜக) 17 மாநிலங்களில் நடக்கிறது.. தமிழ்நாட்டிற்கு தான் விருது கொடுக்கிறது.. அண்ணா திமுக ஆட்சியில் பல விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் வாங்க முடியவில்லை.. நாங்கள் வாங்கினோம் அல்லவா? இது உங்களுக்கு தெரியாதா? ஒரு ஐபிஎஸ் ஆபிசர்,மெத்த படித்தவர், ரொம்ப அறிவாளி என்று சொல்றீங்க.. அவருக்கு இது தெரியாதா?" இவ்வாறு கேபி முனுசாமி மேடையில் சரமாரியாக பாஜகவையும் அண்ணாமலையும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications