ஓசூரில் காதலனுடன் உல்லாசம்.. பார்த்த சிறுவனுக்கு ஸ்கெட்ச்.. சிக்கிய கல்லூரி மாணவி குறித்து தகவல்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டியை சேர்ந்த சிறுவன் ரோகித் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2-ந்தேதி கிரிக்கெட் விளையாட போன சிறுவன் வீடு திரும்பவில்லை.. மாவனட்டி மாதேவன் என்பவரும், அவரது காதலியும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனுக்கு ஸ்கெட்ச் போட்ட கும்பல்கள் செய்த செயல்கள் ஓசூரையே ஆடிப்போக வைத்துள்ளது.இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவி கைதாகி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டியை சேர்ந்தவர் சிவராஜ் என்பவருடைய மகன் ரோகித்துக்கு 13 வயது ஆகிறது. இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2-ந்தேதி பள்ளி செல்லவில்லை. வீட்டில் இருந்த சிறுவன் மாலை கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி வெளியே சென்றவன், மீண்டும் வீடு திரும்பவே இல்லை. இந்த நிலையில் சிறுவன் ரோகித் திருமொடுக்கு கீழ்பள்ளம் என்ற இடத்தில் புதருக்குள் பிணமாக கிடந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அதே பகுதியை சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன் (21), கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள உனுசனஅள்ளியை சேர்ந்த மாதேவன் (21) ஆகிய 2 பேரும் சிறுவனை காரில் அழைத்து சென்று கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இந்த கொடூர கொலை வழக்கில் கைதான மாவனட்டி மாதேவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், நான் 18 வயதுடைய கல்லூரி மாணவியை காதலிக்கிறேன். நாங்கள் 2 பேரும் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்து விட்டார். இதை யாரிடமும் சொல்லாதே என்று நான் கூறினேன். பின்னர் அவனை சமாதானப்படுத்துவதற்காக எனது நண்பனான உனுசனஅள்ளியை சேர்ந்த மாதேவனை (21) காரை எடுத்து வருமாறு கூறினேன். பின்னர் ரோகித்தை அஞ்செட்டியில் உள்ள பேக்கரிக்கு நாங்கள் அழைத்து சென்றோம். அங்கு அவனுக்கு இனிப்பு பீர் வாங்கி கொடுத்தோம். அதை குடித்து விட்டு சிறுவன் நான் காதலித்து வந்த பெண் குறித்து தவறாக பேசியபடி இருந்தான். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அஞ்செட்டியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு நாங்கள் சிறுவனை காரில் அழைத்து சென்றோம். அங்கு அவனை மூச்சு திணறடித்து கொலை செய்தோம். பின்னர் உடலை புதரில் வீசிவிட்டு வந்துவிட்டோம்." இவ்வாறு மாவனட்டி மாதேவன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதற்கிடையே சிறுவன் ரோகித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவன் மூச்சு திணறி கொல்லப்பட்டதும், உடலை வீசிய போது, அவனது வயிறு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதும் உறுதியானது. தொடர்ந்து சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக 18 வயதுடைய கல்லூரி மாணவியையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications