மனைவியை காணோம்.. வெறியேறிய கணவன்.. சிறுவனை பணயக் கைதியாக பிடித்து சிலிண்டரை திறந்து வைத்த கொடூரம்!
வீட்டுக்கு வந்த ராஜா, தனது மனைவி அமுதா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அமுதாவின் அண்ணன் காளியப்பன்தான் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டதாக நினைத்து ஆத்திரம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி: தனது மனைவி காணாமல் போனதால் ஆத்திரமடைந்த கணவன், ஒரு சிறுவனை பணயக் கைதியாக பிடித்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 குழந்தைகளும் உள்ளனர்.
இதனிடையே, ராஜா சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வீடு வாங்கியுள்ளார். ஆனால், அவரால் சரிவர கடனை அடைக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ராஜாவுக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி மீது தாக்குதல்
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி அமுதாவை ராஜா சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது அண்ணன் காளியப்பனுக்கு போன் செய்த அமுதா, நடந்த விஷயங்களை கூறியுள்ளார். இதன்பேரில், நேற்று காலை அங்கு வந்த காளியப்பன், அமுதாவை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.

மனைவி இல்லாததால் ஆத்திரம்
இதனைத் தொடர்ந்து, அன்று இரவு வீட்டுக்கு வந்த ராஜா, தனது மனைவி அமுதா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அமுதாவின் அண்ணன் காளியப்பன்தான் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டதாக நினைத்து ஆத்திரம் அடைந்தார். இதனால் காளியப்பனை பழிவாங்க நினைத்த ராஜா, இன்று காலை காளியப்பன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த காளியப்பனின் 3 வயது மகனை ராஜா தூக்கி வந்து தனது வீட்டில் அடைத்தார்.

சிலிண்டரை திறந்துவிட்டு..
பின்னர், காளியப்பனை செல்போனில் தொடர்புகொண்ட ராஜா, தனது மகனை கடத்தி வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும், அமுதாவை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் சிறுவனை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன காளியப்பன், போலீஸாரை அழைத்துக் கொண்டு ராஜா வீட்டுக்கு சென்றார். தனது மனைவியை அழைத்து வராமல் போலீஸாரை அழைத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த ராஜா, வீட்டில் இருந்த சமையல் சிலிண்டரை திறந்துவிட்டார். மேலும், போலீஸார் இங்கிருந்து செல்லவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்க செய்துவிடுவேன் என மிரட்டினார்.

நையப்புடைத்த போலீஸார்
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த போலீஸார், ராஜாவை சமாதானம் செய்வது போல பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ராஜா எதற்கும் மசியவில்லை. ஒருகட்டத்தில், சிலிண்டரில் உள்ள காஸ் வீடு முழுவதும் பரவியது. இதையடுத்து, தாமதிக்காத போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தீ பொருத்த முயன்ற ராஜாவை போலீஸார் மடக்கி பிடித்து நன்றாக "கவனித்தனர்." பின்னர் சிறுவனை மீட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், ராஜாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். ஒரு சாதாரண குடும்பத் தகராறு பெரும் விபரீதத்தில் முடிவடைய இருந்தது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications