குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் ஓலா வாகன தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த ஆட்சியிலேயே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலை அமைப்பது உறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையத்தை அந்த நிறுவனம் அமைக்க கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உலகிலேயே பெரிய நிறுவனம்
உலகிலேயே இதுதான் பெரிய நிறுவனம். ஓலா நிறுவனம் இங்கு பைக் உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும் இது. இதன் மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் அதிக கவனம் ஈர்க்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இடையில் இப்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆர்வம்
இப்படிப்பட்ட நிலையில்தான் கிருஷ்ணகிரி ஓலா நிறுவனம் அதிக கவனம் பெறுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் ஓலா வாகன தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பெண்கள்தான் இங்கு அனைத்து பணிகளையும் செய்ய போகிறார்கள். இங்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை முதல் கட்டமாக தயாரிக்க இருக்கிறோம்.

தயாரிப்பு
நிறுவனம் தயாரிப்பு பணிகளை தொடங்கியதும் 10 ஆயிரம் பெண்களுக்கும், மிக குறைந்த அளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இது சமூக ரீதியாக அவர்களை வளர்ச்சி அடைய உதவும். அவர்களுக்கும் சம உரிமை கொடுக்க நாங்கள் முயன்று வருகிறோம்.

அதிகம்
வரும் ஆண்டுகளில் இங்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிப்போம். பெண்களுக்கு இதற்கான உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிகளை அளிப்பதற்கு என்று தனி முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் வருடத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களை தயாரிக்க போகிறோம். இதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்கும்.












Click it and Unblock the Notifications