கோழிக்கொண்டை ஸ்டைல்.. 'நறுக்'கிய இன்ஸ்பெக்டர்.. ஆயுதபடைக்கு தூக்கியடித்த எஸ்பி
கிருஷ்ணகிரி: வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பலர் கண்டனக்குரல் எழுப்பினர். இதனால் மஹாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் கடந்த 7ம் தேதி மஹாராஜகடை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
கோழிக்கொண்டை
அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அப்பகுதியில் வந்துகொண்டிருந்தான். அதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் அச்சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது
சீர் செய்தார்
இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா என்று கூறிய இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சிறுவனை அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, சீராக முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.
சிறுவனின் படம்
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. 15 வயது சிறுவனின் முகத்தை வீடியோ எடுத்து மஹாராஜகடை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வெளியிட்டதற்காக பல்வேறு தரப்பினர் கண்டன குரல் கொடுத்தனர்.
ஆயுதபடைக்கு மாற்றம்
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதார் விசாரணை நடத்தினார். இதையடுத்து 15 வயது சிறுவனை அழ வைத்து அதை வீடீயோ வைத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டதற்காக மஹாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமாரை ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றி எஸ்பி கங்காதார் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.