ஓசூர் அருகே.. போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்ற நபர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குற்ற வழக்கு விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆந்திராவை சேர்ந்த நாம்தார் உசேன் என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். நாம்தார் உசேன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடீரென நாம்தார் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்கினார்.

இதில், சப் இன்ஸ்பெக்டர் வினோத் உள்பட 3 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் வினோத் தற்காப்புக்காக நாம்தார் உசேனின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் நாம்தார் உசேன் காலில் காயம் அடைந்தார். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது குற்றவாளி போலீசாரை கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயமடைந்த நாம்தார் உசேன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் உள்பட 3 போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications