வந்த வேகத்தில் திடீர் ஆய்வு.. ஹாஸ்டல் வார்டனை சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கோப்புகளை ஆய்வு செய்து குளறுபடி செய்திருந்த வார்டனை பணி இடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அமைச்சர் உதயநிதி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இதற்காக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாட்டு மாணவர்களுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர் விடுதியில் பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு வழங்கப்படுகின்ற திட்டங்கள் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என்று மாணவர்களிடம் விசாரித்தார். மாணவர்களிடம், தாங்கள் நல்ல முறையில் படிக்கவும் விளையாட்டு துறையில் மேலும் சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி காட்டி நாயக்கனப்பள்ளியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல பல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதியை திடீர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் மின்சார வசதி, அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுடைய போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி.

அங்கு ஆய்வு செய்து மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆய்வுகளின் அடிப்படையில் கோப்புகளில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின் வார்டன் முருகன் என்பவரை பணி இடை நீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications