ஓபிஎஸ் அணியில் விழுந்த அடுத்த விக்கெட்.. 3 மாதத்தில் மீண்டும் டைவ்! எல்லாத்துக்கும் காரணம் அவர்தானா?
கிருஷ்ணகிரி : ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சி தாவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளது ஓபிஎஸ்ஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதாகவும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி தரப்போடு நெருக்கமாக இருந்து வருவதாகவும் நமது ஒன் இந்தியா தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியில் குழப்பங்கள் முற்றிய நிலையில், கேபி முனுசாமியை தீவிரமாக எதிர்த்து வந்த ஜேகே வெங்கடாச்சலம், முனுசாமி முன்னிலையிலேயே ஈபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
2023ல் நடைபெற இருக்கும் TNPSC தேர்வுகள்.. அடுத்து குரூப் 4 தேர்வு எப்போது தெரியுமா? முழு விவரம்!
ஓபிஎஸ் அணி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து கட்சியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என பிளவு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சமீபத்தில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். இது ஓபிஎஸ் அணி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈபிஎஸ் அணியில் இணைந்த புள்ளி
இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான முக்கிய நிர்வாகி ஒருவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளராக, கிருஷ்ணகிரி தொகுதி அமைப்பாளராக பொறுப்பு வகித்த ஜே.கே.வெங்கடாசலம் எடப்பாடி பழனிசாமி அணியின் கே.பி.முனுசாமியை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி அதிமுக
3 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், சென்னையில் நட்சத்திர ஓட்டலில், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்தனர். அவ்வாறு இணைந்த முன்னாள் சேர்மன் ஜே.கே.வெங்கடாசலம், தேவராஜ், தங்கராஜ், வெற்றிவேல், டாக்டர் ஜான் திமோத்தி, ராஜேந்திர கவடு மற்றும் முனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து தீவிரமாக ஓபிஎஸ் அணிக்கு பல நிர்வாகிகளை அழைத்து வரும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அடுத்தகட்டமாக
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு அதிலும் முழு ஈடுபாட்டுடன் அவர்கள் பங்கேற்று இருந்தனர். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியில் அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேப்பனஹள்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்ட மது (எ) ஹேம்நாத், முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் பலம் அதிகரித்து வந்தது.
ஏமாற்றமே மிச்சம்
இப்படியான சூழலில்தான் ஓபிஎஸ் அணியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொண்டர்களிடையே அதிருப்தி நிலவி வந்தது. ஓபிஎஸ் அணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி
இதன் காரணமாக தீவிரமாக கே.பி.முனுசாமியை எதிர்த்து வந்த ஜே.கே.வெங்கடாசலம், தற்போது கே.பி.முனுசாமியை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை, மாற்று அணியை நோக்கி படையெடுத்து வருவது ஓபிஎஸ்ஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு மட்டும் ஏன்?
ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக உள்ள கோவிந்தராஜ் தலைமையில் கட்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என ஓபிஎஸ் அணியில் அதிருப்தி நிலவி வந்தது. மாநிலம் முழுவதும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நடைமுறை உள்ள சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஏன் ஆறு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
காரணம் வைத்திலிங்கம்?
ஜே.கே.வெங்கடாச்சலம், தேவராஜ் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பிரித்து நிர்வாகிகளை நியமிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்த பிறகும், வைத்திலிங்கம் மற்றும் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முட்டுக்கட்டையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடுமையாக அதிருப்தி அடைந்தே, வெங்கடாசலம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளதாக கூறப்படுகிறது.