ஓசூர் டாடா நிறுவன பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா விவகாரம்: தப்பிச் சென்றவர் டெல்லியில் கைது
கிருஷ்ணகிரி: ஓசூர் டாடா நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய கேமரா வைத்த நீலு குமாரியின் ஆண் நண்பரான ரவி பிரதாப் சிங்கை டெல்லியில் கைது செய்த தனிப்படை போலீசார், அவரை ஒசூர் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.
கெலமங்கலம் அருகே தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்பரை தப்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவானவரை தேடி போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு விரைந்துள் ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள டாடா தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி உள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக விடுதி காப்பாளரிடம் சக பெண் தொழிலாளிகள் கூறிய தகவலின் அடிப்படையில் கேமரா அகற்றப்பட்டு, தொழிற்சாலை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு நீலுகுமாரி குப்தாவை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் சந்தோஷ் என்பவரையும் கைது செய்தனர்.
இதனிடையே, சந்தோஷிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீலுகுமாரி குப்தாவிடம் மீண்டும் நடத்திய விசாரணையில், ரகசிய கேமராவை பொருத்தச் சொன்னது பெங்களூரில் ஓட்டுநராக பணிபுரியும் இன்னொரு ஆண் நண்பரான ஒடிசாவைச் சேர்ந்த ரவி பிரதாப்சிங் என்பதும், அவரை தப்ப வைக்க போலீசாரிடம் தவறான தகவலை நீலுகுமாரி குப்தா தெரிவித்ததும், ரவி பிரதாப்சிங் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, உத்தனப்பள்ளி போலீசார் 5 பேர் நேற்று காலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் விரைந்தனர். ரகசிய கேமரா வைத்த நீலு குமாரியின் ஆண் நண்பரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். டெல்லியில் கைதான ரவி பிரதாப் சிங்கை ஒசூர் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.
இதற்கிடையே, நேற்று நண்பகலில் விடுதி வளாகத்தில் திரண்ட பெண் தொழிலாளிகள், இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசா மற்றும் தனியார் தொழிற்சாலை உயர் அதிகாரிகள் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்தப் பிரச்சினையால் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பலர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications