சொல்ல சொல்ல கேட்காத ஸ்டாலின்.. திமுக தோல்வியின் பின்னணியில் ‘ஓசூர் சென்டிமென்ட்'.. போச்சே
கிருஷ்ணகிரி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த பின்னடைவுக்கு 'ஓசூர் சென்டிமென்ட்' காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஓசூர் சென்டிமென்ட் என்பது என்ன? அது எப்படி திமுகவை பாதித்து வருகிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 80க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 50 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் திமுகவின் பின்னடைவுக்கு 'ஓசூர் சென்டிமென்ட்' முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அல்லது முதல்வர் ஸ்டாலின் அடுத்த தேர்தலுக்காக ஓசூரில் பொதுக்கூட்டம், பிரசாரம் செய்தால் மீண்டும் அந்த கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு கிடையாது. இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு தொடர்ந்து வருகிறது.
கடந்த 1991ல் திமுக கூட்டணியில் ஓசூரில் ஜனதாதளம் வேட்பாளர் வெங்கடசாமியை ஆதரித்து கூட்டணி தலைவர் என்ற முறையில் கருணாநிதி பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கவில்லை. அடுத்ததாக 2001ல் கூட்டணியில் பாஜக வேட்பாளர் வெங்கடசாமிக்கு ஆதரவாகவும், 2011ல் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாகவும் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த 2 தேர்தல்களிலும் திமுக ஆட்சியை பிடிக்கவில்லை.
கடந்த 2019 தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஓசூரும் ஒன்று. இந்த தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை வந்தது. இதையடுத்து ஓசூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திமுக வேட்பாளர் சத்யா வென்றாலும் கூட தமிழகத்தில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் ஓசூரில் பிரசாரம் செய்தால் திமுக ஆட்சியை பிடிக்காது என்ற சென்டிமென்ட் உள்ளது. இந்த தேர்தலிலும் ஓசூரில் பிரசாரத்தை தவிர்க்க ஸ்டாலின் நினைத்தார். இதனால் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோபச்சந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இடத்துக்கு பதில் ஓசூரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே கடந்த மாதம் 19ம் தேதி திமுக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினர். இந்நிலையில் தான் இந்த தேர்தலிலும் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது.
அதேவேளையில் தமிழகத்தில் கடந்த 1989, 1996, 2006, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் ஓசூரில் பிரசாரம் செய்யவில்லை. இந்த தேர்தல்களில் திமுக ஆட்சியை பிடித்தது.












Click it and Unblock the Notifications