நடுரோட்டில் பள்ளி மாணவியை தாக்கிய வாலிபால் பயிற்சியாளர் கைது! வீடியோ வைரலான நிலையில் ஆக்ஷன்!
கிருஷ்ணகிரி: ஒசூரில் பள்ளி மாணவியை தாக்கிய புகாரில் வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜனை கைது செய்துள்ளது போலீஸ். பள்ளி மாணவியை வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜன் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23 ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளன. இதில், ஓசூரைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.

அப்போது, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், தனது கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி ஒருவர் திருடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாணவியையும், அவரது பயிற்சியாளரையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயிற்சியாளர், சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். மேலும், அந்த மாணவியை பொதுவெளியிலேயே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படியே அவர் ஆசிரியையின் கைக்கடிகாரத்தை எடுத்திருந்தாலும், இப்படியா தாக்குவது எனக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், பள்ளி மாணவியை தாக்கிய புகாரில் வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜன் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications